மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜின் உடல் நுங்கம்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது. | படம்: பி.ஜோதிராமலிங்கம் |
சென்னை: இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கடந்த 27-ம் தேதி காலை நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.
அவரது மறைவு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன், சந்தானபாரதி, லிங்குசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, பார்த்திபன், சரத்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி, ஜெயராம், விக்ரம்பிரபு, மலையாள நடிகரும் எம்.பி.யுமான சுரேஷ் கோபி, திலீப், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, ரேவதி, அம்பிகா, ராதா, நயன்தாரா, த்ரிஷா, சினேகா உட்பட திரையுலகினர் ஏராளமானோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, பாக்யராஜ் உடல் நேற்று காலை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து, கதீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் வழியாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதி ஊர்வல வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் ‘அன்புடன் உங்கள் கே.பாக்யராஜ்’ என்ற வாசகத்துடன் அவரது கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. அந்த வாகனத்தில் பாக்யராஜ் உடல் அருகே அவரது மனைவி பூர்ணிமா, மகள் சரண்யா, மகன் சாந்தனு, மருமகள் கீர்த்தி ஆகியோர் கண்ணீர் மல்க அமர்ந் திருந்தனர்.
வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர்.
திரைத்துறையில் பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை வந்தடைந்ததும், பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் ஆனந்த், ராஜ் மோகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து பாக்யராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், காவலர்கள் 72 குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மகன் சாந்தனு கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்த பிறகு, உடல் தகனம் செய்யப்பட்டது.