தமிழகம்

‘நீங்கள் விதைத்த விதைகள் இன்னும் பல நல்லகண்ணுக்களாக மலரும்’ - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: ‘நீங்கள் விதைத்த விதைகள் இன்னும் பல நல்லகண்ணுக்களாக மலரும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “சேவையையே தனது வாழ்நாள் கீதமாகக் கொண்டு வாழ்ந்த ஓர் உன்னதமான ஆன்மாவான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, மிகுந்த துயரத்துடன் நாம் விடை கொடுக்கிறோம். ஒன்பது தசாப்தங்களாகத் தன்னலமற்ற முறையில் பிறருக்காகவே வாழ்ந்த அவர், ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரோடு ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த சில அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக என்னை நான் கருதுகிறேன்.

          

அதையும் தாண்டி, அவரது இல்லத்திலேயே ஒரு நூலகத்தைத் திறந்து வைக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அறிவுக் கருவூலத்தை அவர் தனக்காக அல்லாமல், அனைவரின் அறிவு மேம்பாட்டிற்காகவே அடக்கத்துடன் உருவாக்கினார்.

இந்த தருணத்தில், அவர் முன்மொழிந்த சித்தாந்தங்களையோ அல்லது அவர் ஏந்திய அரசியல் கொடிகளையோ சற்று மறந்து விடுங்கள். இந்தப் பெரியவர் எப்படி வாழ்ந்தார் என்ற நித்திய உண்மையின் முன்னால் அவை யாவும் மங்கிப்போகின்றன. சுயநலம் துளியும் இல்லாத ஒரு வாழ்க்கை. அவர் எடுத்த ஒவ்வொரு மூச்சும், வைத்த ஒவ்வொரு அடியும் பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

அவர் ஒரு கணமாவது தன்னைப் பற்றி யோசித்தது உண்டா? எதையும் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் இந்தக் காலத்தில், அவர் ஒரு அபூர்வ முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். எதையும் எதிர்பாராமல் வழங்க மட்டுமே செய்த ஒரு தலைவர், எண்ணற்ற இதயங்களில் நோக்கத்தின் விதைகளை விதைத்தவர். தொண்ணூறு ஆண்டுகால இத்தகைய அசைக்க முடியாத பொதுச்சேவை என்பது யாராலும் எளிதில் பின்பற்ற முடியாத ஒன்று; அது நம்முடைய வாழ்க்கையை நாமே கேள்வி கேட்கத் தூண்டுகிறது.

அவருக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு வீட்டிற்குத் திரும்பியதும், எதையும் தொடாமல் குளிக்கும் நமது பாரம்பரியத்தை நான் கடைப்பிடித்தேன். இருப்பினும் எனக்குள் ஏதோ ஒன்று தவித்தது. அவருக்குப் பின் அவரது சாரத்தை (Essence) கழுவிவிட மனமில்லாமல், என்னால் முடிந்த அனைத்தையும் தொட்டேன். அவரது இருப்பு எங்கும் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது எனக்குள் ஊடுருவ வேண்டும், அதன் கனத்தைத் தாங்கி என்னாலும் அர்த்தமுள்ளதாக வாழ முடியுமா என்று சோதித்துப் பார்க்க விரும்பினேன்.

தோழர் நல்லகண்ணு அவர்களே, நீங்கள் மக்களின் மனதிலும் ஆன்மாவிலும் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளீர்கள்; நீங்கள் விதைத்த விதைகள் இன்னும் பல நல்லகண்ணுக்களாக மலரும், உங்கள் ஒளி என்றும் நிலைத்திருப்பதை அவை உறுதி செய்யும்.

செவ்வணக்கம் தோழரே. உங்கள் மறைவின் மூலம், நீங்கள் எங்களுக்கு இழப்பை அல்ல, மாறாகத் தன்னலமற்ற வாழ்வின் அழியாத தன்மையைக் கற்பிக்கிறீர்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT