தமிழகம்

“சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: கல்வி ஒன்றே விடுதலை தரும் என நம்பியவர் அம்பேத்கர். புத்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தான் அவரை மாற்றியது.

இளம் வழக்கறிஞர்கள் அம்பேத்கரை மேலும் படிக்க வேண்டும். சாதி ஒழிப்புக்கு கல்வி என்ற ஆயுதத்தை தவிர வேறு சிறந்த ஆயுதம் இல்லை. இதை உணர்த்தியவர் அம்பேத்கர்.

அம்பேத்கருக்கு பல இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை வேலி போட்டு அடைத்திருப்பது அவலமானது. சாதி மறுப்பாளர்களால் தான் சாதியை ஒழிக்க முடியும். தான் இந்த சாதியை சேர்ந்தவன் என பெருமை பேசும் யாராலும் சாதியை ஒழிக்க முடியாது.

அம்பேத்கரின் சிந்தனைகளை ஏற்க மறுப்பவர்கள் அவரது சிலையை உடைக்க நினைக்கி றார்கள். அவரது சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், குற்றவியல் நீதிபதி செல்லப் பாண்டி மற்றும் நீதிபதிகள், சங்கப் பொருளாளர் ராஜ்மோகன், துணைத் தலைவர்கள் வீர பெருமாள், சிவானந்தம், துணைச் செயலாளர்கள் பாலமுருகன், கார்த்திகேயன், நூலகர் சுரேஷ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழக தலைவர் கு.சாமிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT