மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் பூஜை செய்ய 5 பேருக்கு அனுமதி வழங்கினால், நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படும். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நாளை பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதான வழக்கின் மனுதாரர் ராம.ரவிக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மற்றொரு மனுதாரரான அரச பாண்டி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இந்திய ஆட்சிப் பணி விதிகள் அடிப்படையில் துறைரீதியாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அமைச்சர் ரகுபதியையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கக் கோரி பரமசிவம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தன. மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அங்கு ஒரேநேரத்தில் பல்வேறு குழுக்கள் திரண்டதாலும், அங்கு கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டும், பொது அமைதி மற்றும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கிலும் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டியதானது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த மாநகர் காவல் ஆணையர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு சரியான நேரத்தில் பிறப்பிக்கப்பட்டதால் பெரிய மதரீதியான மோதல் தடுக்கப்பட்டது.
நிபந்தனையற்ற மன்னிப்பு
சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கத்தில் மட்டுமே தடையாணை பிறப்பிக்கப்பட்டது. வேறு எந்தவிதமாமன காரணமும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகள் சட்டத்தின் உத்தரவுகள் என்பதை அறிவேன். அதை மீறும் எண்ணம் இல்லை. நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்.
இதையேற்று நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். பின்னர் நீதிபதி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஏற்கெனவே ஏற்றிய இடத்தில் தீபம் ஏற்றக் கூறவில்லை.
இந்துக்களுக்குச் சொந்தமான பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டது என்றார். அதற்கு அரசுத் தரப்பில், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை. அதைக் கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் செயல்பட்டது.
அடுத்த கார்த்திகை தீப தினத்துக்கு முன்பு இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, நீதிமன்றம் சொல்லும் 5 பேர் கோயில் மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை (மார்ச் 4) தெரிவிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் ஆஜராக வேண்டாம். மாநகர் காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமைச்சர் ரகுபதியைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார்.
‘தீப விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி விஷமத்தனம்’
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமைச்சர் ரகுபதியை சேர்க்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை அனுமதிக்க முடியாது என்று கூற அமைச்சருக்கு மட்டும் அல்ல, வேறு யாருக்கும் துணிச்சல் கிடையாது. தீர்ப்புக்கு பிறகு இருக்கும் ஒரே வழி மேல்முறையீடு அல்லது மறுஆய்வுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதுதான்.
பொதுவெளியில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதன் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும் அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.
சட்ட அமைச்சர் போன்ற உயர் பதவியை வகித்த ஒருவருக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர் ரகுபதியின் கருத்து வெளிப்படையானது. அதை அவர் இதுவரை மறுக்கவில்லை. உண்மையில் தகன மைதானம் என அவர் கூறிய கருத்து பரவலாக ஏளனத்தை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் அவரின் அறியாமையை ஒப்புக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என ரகுபதி கூறினார். ஆனால் இன்று வரை மேல்முறையீடு செய்யவில்லை.
அவரின் நிலைப்பாட்டை தடை உத்தரவு பிறப்பித்த மதுரை மாவட்ட ஆட்சியர் தவிரவேறு யாராலும் மறுக்கப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை அழைக்க மறுக்கிறேன்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலுக்காக திசை திருப்ப ரகுபதி விஷமத்தனம் செய்துள்ளார். அமைச்சரின் கருத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அமைச்சருக்கு எதிரான இடையீட்டு மனுவை முடிக்க நினைக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க தயங்கமாட்டேன். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.