ஜெயக்குமார்
சென்னை: “அதிமுக ஒரு கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கற்களை பற்றி கவலை இல்லை” என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி, சென்னை - மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தற்போது பழனிசாமி தலைமையில் அதிமுக ஒரு வலிமையான இரும்புக் கோட்டையாக திகழ்கிறது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரமாக இருந்து வருகிறது.
இதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் உதிர்ந்த செங்கற்கள் மட்டுமே. உதிர்ந்த செங்கற்களை பற்றி கோபுரத்துக்கு எந்த கவலையும் இல்லை. யாராலும் இந்த கோட்டையின் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.
ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த முடிவுகளை கட்சியின் பொதுச் செயலாளர் தான் எடுப்பார். அவர் எடுத்துள்ள நிலைப்பாடுகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அது அவருடைய கருத்து. அதற்கு பழனிசாமி உரிய நேரத்தில் பதிலளிப்பார்.
மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது. அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதை தெளிவாக சொல்லிவிட்டோம். 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களுக்கானது.
அதை சிதைக்காமல் உள்ளது உள்ளபடியே இருந்தால் விவசாய தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, இத்திட்டத்தில் எந்தவிதமான கெடுபிடிகளையும் மத்திய அரசு புகுத்தக் கூடாது. மகாத்மா காந்தியின் பெயரிலேயே இத்திட்டம் தொடர வேண்டும்” என்று அவர் கூறினார்.