வானதி சீனிவாசன்| கோப்புப் படம்
சென்னை: 'பெரம்பூரில் இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிங்கப் பெண் அதிரடிப் படை தற்போது சோர்ந்து வழக்கம்போல் மகளிர் காவல் நிலையங்களாக செயல்படுவதற்கு எதற்கு தனி சிறப்புப்படை?' என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை பெரம்பூரில் இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமும் இதேபோல் பெரம்பூரில் இளம்பெண் ஒருவரை முன்னாள் ஆண் நண்பர் வீடு புகுந்து தாக்கியதாகச் செய்திகள் வந்தது.
மேடைகள் தோறும் பெண்களை அக்கா, தங்கை, தோழி என உணர்வுப்பூர்வமாகப் பேசும் முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழகப் பெண்களுக்கு முதல்வர் எப்படி பாதுகாப்புத் தரப் போகிறார் என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழுந்துள்ளது.
சீரும் சிங்கங்களாய் ஏதோ பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட சிங்கப் பெண் அதிரடிப் படை தற்போது சோர்ந்து வழக்கம்போல் மகளிர் காவல் நிலையங்களாக செயல்படுவதற்கு எதற்கு தனி சிறப்புப்படை?
எனவே, பெண்களை காதல் என்ற பெயரில் அத்துமீறும் ஆண்களிடமிருந்து காக்கும் வகையில் சிங்கப் பெண் படையை முடுக்கி விட்டு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.