தமிழகம்

பழனிசாமி Vs எஸ்.பி.வேலுமணி + சி.வி.சண்முகம் - மீண்டும் உடைகிறதா அதிமுக?

வீரமணி சுந்தரசோழன்

மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிசாமிக்கும், வேலுமணி + சண்முகத்துக்கும் இடையே வெடித்துள்ள மோதல், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தமிழக வரலாற்றிலேயே எம்ஜிஆருக்கு பின்னர் யாரும் தொடர்ந்து இருமுறை ஆட்சியமைத்தது இல்லை என்ற வரலாற்றை உடைத்து 2011-க்குப் பின்னர் 2016-லும் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. அந்த ஆண்டு டிசம்பர் மாதமே அவர் உயிரிழந்த பின்னர், அதிமுகவுக்கு தொடர்ந்து கஷ்ட காலம் தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மகுடம் சூட சசிகலா தயாரானபோது ஓ.பன்னீர்செல்வம் முதல் பிளவுக்கு வித்திட்டார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் ஏற்பட்ட காட்சி மாற்றங்களில் சசிகலாவும், தினகரனும் தூக்கியெறியப்பட்டனர். அப்போது இரண்டாவது பிளவை சந்தித்தது. அதன்பின்னர் அதிமுகவின் பல முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிகளுக்கும் தாவினார்கள்.

அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சித்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தவெகவுக்கு போனார். அவருக்கு பின்னர் ஜேசிடி பிரபாகரனும் போனார். அதிமுகவில் ஐக்கியமாக பல கட்ட முயற்சிகளை செய்த ஓபிஎஸ்சும் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா என பலரும் திமுகவில் இணைந்தனர். இப்படி கடந்த 10 ஆண்டுகளில் பலரை இழந்த அதிமுக, இப்போது அடுத்த பிளவுக்கு தயாராகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதன் காரணமாக, ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என 50 ஆண்டுகளாக இருந்துவந்த அதிமுக இப்போது மூன்றாவது கட்சியாக மாறியுள்ளது. பல தொகுதிகளில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக, கணிசமான தொகுதிகளில் டெபாசிட்டையே இழந்தது அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்தச் சூழலில்தான், அதிமுகவில் பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு அணிகள் பிரிந்துள்ளன. கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதனால் வேலுமணியின் கை ஓங்கியுள்ளது. அதேபோல வட மாவட்டங்களிலும் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது, அங்குள்ள எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம் பின்னால் அணி திரண்டுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் பக்கம் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், இரா.காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோர் திரண்டுள்ளனர். இவர்கள் வைக்கும் முக்கிய விஷயங்கள் இதுதான், ‘ 2017-ல் அதிமுக பழனிசாமி வசம் சென்றது முதல் ஒரு தேர்தலில் கூட கட்சி வெற்றிபெறவில்லை. தொடர்ந்து 11 தேர்தல்களில் தோல்வியையே சந்தித்துள்ளோம். கடந்த தேர்தலில் சரியான கூட்டணி வைக்க இபிஎஸ் தவறிவிட்டார். தேர்தல் செலவுக்கு வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை’ என குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக சட்டப்பேரவைக் கட்சி தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரையும் நியமிக்க தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இவர்களின் பக்கம் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதே நேரத்தில் பழனிசாமியை தலைவராக்க 17 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ளனர். பழனிசாமி பக்கம் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவும் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. ஆனால், தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நிரந்தரமாக மூன்றாவது கட்சியாகி கரைந்து விடுவோம் என பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றியதாக சொல்லப்படுகிறது. அதிகம் உறுப்பினர்களை கொண்ட வேலுமணி - சண்முகம் தரப்பு தவெகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் அமைச்சரவையில் இணையும் திட்டமும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்க மாட்டேன் என சொல்லியுள்ள தவெக, அதிமுகவின் ஆதரவை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதுபோல பாஜகவின் ஆதரவு வேலுமணிக்கா, பழனிசாமிக்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே பல பிளவுகளையும், முக்கிய தலைவர்களையும் இழந்து, தொடர் தோல்விகளில் தத்தளிக்கும் அதிமுக தொண்டர்கள், இன்னொரு பிளவை தாக்கிக் கொள்வார்களா என்பதும் சந்தேகம்தான்.

‘எனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் இருக்கும்’ என சட்டப்பேரவையில் முழங்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவர் உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆகும் முன்பே, சுக்கு நூறாக நொறுங்கிப் போயிருக்கிறது அக்கட்சி. இப்போது அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்குள்ளேயே வெடித்துள்ள மோதல், கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது.

தமிழக அரசியல் களம், தவெக – திமுக என மாறும் நிலையில், பிரதான கட்சியான அதிமுகவில் வெடித்துள்ள கலகம், அக்கட்சியினரை வேறு கட்சிகளை நோக்கி வேகமாக நகர்த்தும் என்பதை தலைவர்கள் உணரவேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

SCROLL FOR NEXT