நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்

 
தமிழகம்

“724 செவிலியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்வது பிரித்தாளும் சூழ்ச்சி” - நயினார் நாகேந்திரன்

வெற்றி மயிலோன்

சென்னை: “எட்டாயிரம் பேருக்கு மேல் காத்திருக்கும் நிலையில், 724 செவிலியர்களுக்கு மட்டும் எதன் அடிப்படையில் திமுக அரசு பணி நிரந்தரம் செய்வதாக கூறுகிறது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘செவிலியர்களுக்கு செவிசாயுங்கள் முதல்வர் அவர்களே. கடந்த 18ம் தேதியிலிருந்து 8,000-த்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டி இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.

செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், “தற்போது பணியிடங்கள் எதுவும் காலி இல்லை. கலைந்து செல்லச் சொல்லுங்கள்” என்று மிரட்டியிருந்த நிலையில் தற்போது அவர்களில் 724 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றுரைத்துள்ளார். எட்டாயிரம் பேருக்கு மேல் பணி நிரந்தரத்திற்காகத் தவமிருக்கும் நிலையில் அவர்களில் 724 செவிலியர்களுக்கு மட்டும் எதன் அடிப்படையில் கூறுகிறது, திமுக அரசு? இது பிரித்தாளும் சூழ்ச்சியா அல்லது ‘பிரச்சினைக்கு நாங்களும் ஏதோ செய்துவிட்டோம்’ எனும் கண்துடைப்பு நாடகமா?

வாக்குறுதி என் 356-ல் கூறியது படி, பணி நிரந்தரம் கேட்கும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அன்னையருக்கு நிகரான அவர்களையும் வஞ்சித்து அவர்கள் வயிற்றிலடிக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT