மீண்டும் அதிமுக-வில் ஐக்கியமாக ஓபிஎஸ் எடுத்த அனைத்து முயற்சிகளும் முட்டுச் சந்தில் முடிந்த நிலையில், "அண்ணன் திமுக-வில் சேர தேதி குறித்துவிட்டார்" என அவருக்கு நெருக்கமானவர்கள் அதிரடி கிளப்புகிறார்கள்.
அதிமுக-வில் வெடித்த ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தால் அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வைத் தொடங்கி தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார். தனிக் கட்சி தொடங்கினால், ‘அதிமுக-வுக்கும் உனக்கும் இனி சம்பந்தமில்லை’ என்று சொல்லி ஒரேயடியாய் கதவை இழுத்து மூடிவிடுவார்கள் என்று நினைத்த ஓபிஎஸ், தனி அணியாகச் செயல்பட்டுக் கொண்டே அதிமுக-வுக்குள் அடைக்கலமாக தூது அனுப்பிக் கொண்டே இருந்தார்.
ஆனால், “எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேரத் தயாராய் இருக்கிறேன்” என்று அவர் சொன்ன பிறகும் கூட ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க சம்மதிக்கவே இல்லை இபிஎஸ்.
இந்த விஷயத்தில் தனக்கு கைகொடுப்பார்கள் என ஓபிஎஸ் பெரிதும் நம்பிய பாஜக தலைவர்களும் அவரை கைவிட்டுவிட்டதால் என்டிஏ-வில் இருந்து வெளியேறினார்.
இதனிடையே, இனியும் இவரை நம்பிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்த அவரது விசுவாசிகளில் சிலர் திமுக பக்கம் சத்தமில்லாமல் செட்டிலானார்கள். இன்னும் சிலர் தாய்க் கழகத்திலும் தவெக-விலும் தஞ்சமடைந்தார்கள்.
இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளன்று, “இனி நான் என்ன சங்கர மடத்துக்கா போவேன்?” என்று போடியில் கூட்டம் கூட்டி விரக்தியுடன் விம்மினார் ஓபிஎஸ்.
இதற்கு நடுவே மகன் சகிதம் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போதே சர்ச்சைகள் வெடித்ததால் சிறிது காலம் அமைதிகாத்தவர், அண்மையில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததுடன், "ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டது; மீண்டும் திமுக-வே ஆட்சிக்கு வரும்" எனப் பேட்டியும் கொடுத்தார் ஓபிஎஸ்.
அவரது ஆதரவு எம்எல்ஏ-வான உசிலம்பட்டி ஐயப்பனும், "ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டும்" எனச் சட்டமன்றத்தில் வாழ்த்தி முழங்கினார்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, "ஓபிஎஸ்ஸை சேர்க்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தால் இபிஎஸ் கூட்டணியை விட்டுப் போய்விடுவார் என பயந்தே அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை.
'மூன்று முறை முதல்வராக இருந்த நான், இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்குச் செல்வது சரியாக இருக்காது' என்று சொல்லி விஜய் பக்கம் போகவும் ஓபிஎஸ் மறுத்துவிட்டார். அதன்பிறகே திமுக தரப்புடன் பேச்சுவார்த்தை தீவிரமானது.
கட்சியில் இணைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்த திமுக தலைமை, ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கும் வாய்ப்பளிக்கலாம் எனச் சொன்னது.
அதனால் தான் முதலில் தனது விசுவாசிகளை அனுப்பிவிட்டு இப்போது அவரும் நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார். அநேகமாக தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி பிப்ரவரி 27 அல்லது 28-ம் தேதி ஓபிஎஸ் திமுக-வில் இணையலாம்” என்றனர்.