தமிழகம்

பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க அண்ணாமலை திட்டமா?

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

கர்நாடகாவில் துடிப்பான இளம் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், தமிழகம் முழுவதும் பாஜக வளர்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

இதனால், இளைஞர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு அதிகரித்தது. தமிழக அரசியலில் அண்ணாமலையும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இதற்கிடையே, தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு, தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

மாநில தலைவர் பதவி இல்லாததால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, கட்சியின் எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். கட்சியில் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மத்திய அரசை எதிர்த்து முதல் குரல் மேலும், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த ‘மும்மொழி கொள்கை’ திட்டத்துக்கு தனது எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்தார்.

பாஜக தலைமையை எதிர்த்து முதல்முறையாக கருத்து தெரிவித்ததன் மூலமாக, சுதந்திரமாக செயல்பட பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2 நாளில் பதில் இந்நிலையில், அண்ணாமலை நேற்று மாலை 5 மணிக்கு அவசர பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அவர் எங்கு சென்றாலும் உடன் வரும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பாதுகாப்பு வீரர்களுடன் கூடிய வாகனம் அவருடன் வரவில்லை. அதேபோல், அண்ணாமலையின் காரில் பாஜக கொடியும் இல்லை.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாட்டை அண்ணாமலை தெரிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம், ‘பாஜகவில் இருந்து விலகுகிறீர்களா? புதிய கட்சி தொடங்கு கிறீர்களா?’ என செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு அனைத்து கேள்விகளுக்கும் 2 நாளில் பதில் அளிக்கிறேன் என்று அண்ணாமலை தெரி வித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணியாக பாஜக பெற்ற வாக்குகளைவிட, இந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகளைத்தான் பாஜக பெற்றுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகையால், இளைஞர்களால் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமா நடிகர்களுக்கு இருப்பதைப்போல், அண்ணாமலைக்கு ரசிகர்களும், இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. அண்ணாமலை கட்சி தொடங்கினால், அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் - அண்ணாமலை என்றே அரசியல் களம் இருக்கும்.

இந்த நல்வாய்ப்பை அண்ணாமலை தவறவிட மாட்டார் என்று நினைக்கிறோம்” என்றனர். இதற்கிடையே பாஜகவில் அண்ணாமலைக்கு மீண்டும் தமிழக பாஜக தலைவர் பதவியோ, மாநிலங்களவை எம்.பி. பதவியோ அல்லது அமைச்சரவையில் இடமோ கொடுத்து அவரைத் தக்க வைக்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர். | படம்: ஜெ.மனோகரன் |

தலைவா தரணி ஆள வா! - போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்

கோவை: தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை யின் பிறந்தநாளையொட்டி (ஜூன் 4), அவரது ஆதரவாளர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், அண்ணாமலையின் பெரிய படத்துடன் ‘தலைவா தரணி ஆள வா’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT