நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
சென்னை: ‘ஈரோடு பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஈரோடு மாவட்டம் பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
முந்தைய திமுக ஆட்சியின் பலனாக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும் போதைப் பொருட்களும் வேர்விட்டுப் பரவிய நிலையில், தற்போதைய ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது.
பிரச்சாரத்தின்போது ‘தூய சக்தி’ என்று முழங்கிவிட்டு, ஆட்சி அமைத்ததும் மவுன விரதமிருந்து மகளிர் பாதுகாப்பைப் பறிப்பதுதான் ‘மாற்றமா’ முதல்வர் விஜய்? “மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது” என இனியும் வசனம் பேசாமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாகச் செயல்படுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.