அருண் ஐபிஎஸ் | கோப்புப்படம்
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடம் மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இன்று (மே 25) மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை கவனித்து வந்த மகேஸ்வர் தயாள் இப்போது காவல் நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் அருண் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முக்கிய பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மேலும், மகேஸ்வர் தயாள் கவனித்து வந்த சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை டி.எஸ்.அன்பு வசம் கொடுத்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக அரங்கேறி வரும் குற்றச் செயல்கள் மக்களை கலக்கம் அடைய செய்துள்ள நிலையில், காவல் துறையில் இந்த முக்கிய மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.