சென்னை: இந்தியாவில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது மிகவும் சிரமமான காரியம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாநகராட்சி முன்னாள் ஆணையர்கள் கந்தசாமி (சென்னை), விஜய கார்த்திகேயன் (கோவை) ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், ‘சம்பந்தப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசு அனுப்பிய கடிதம் கடந்த ஜூலை 28-ம் தேதிதான் கிடைத்தது. அது பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்தியஅரசுக்கு கடந்த ஆக.27-ம் தேதி நினைவூட்டல் கடிதம்அனுப்பப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது: ஊழல் வழக்கில் தொடர்புடைய 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு அனுமதி வழங்க இவ்வளவு தாமதம் ஏற்படுத்துவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்தியாவில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது மிகவும் சிரமமான காரியம்.
வழக்கு தொடர அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தால், இதற்குப் பிறகு அந்த வழக்கில் என்ன நடக்கும் என்பது அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.
தாமதம் ஏற்படுவது ஏன் என்பது குறித்தும், ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை குறித்தும் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பு செயலர் அடுத்த விசாரணையின்போது காணொலியில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்.16-க்கு தள்ளிவைத்தார்.