தமிழகம்

செங்குந்தர் மகாஜன சங்கத்தின் பெயரில் உள்ள ‘சாதியை’ நீக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

சென்னை: தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் பெயரில் உள்ள சாதியை நீக்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்கசிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்தாண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, சாதியை ஊக்குவிக்கும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ்பதிவு செய்ய முடியுமா என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவது குறித்தும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தார்.

பின்னர் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி கடந்தாண்டு ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவில், ‘‘சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப்பெயரை நீக்கும் வகையில் சங்கசட்டதிட்டங்களில் திருத்தங்கள்மேற்கொள்ள வேண்டும். சாதிகளின் பெயர்களில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்கவேண்டும். சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டுமென அரசும் அறிவுறுத்த வேண்டும்.

சாதிப்பெயர்களை நீக்காத சங்கங்களை சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும். இந்தப்பணிகளை மூன்று மாதங்களுக்குள் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இதேபோல சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் உள்ள சாதிப்பெயர்களையும் 4 வார காலத்துக்குள் நீக்க வேண்டும். அப்படி நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்’’ என உத்தரவி்ட் டிருந்தார்.

இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், ‘‘எங்களது நோக்கமே சிறப்பு அதிகாரியின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்பதுதான். மேலும், சங்கங்களின் பெயர்களில் உள்ளசாதிப்பெயர்களை நீக்க வேண்டுமென யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்கவேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

அதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை மேல்முறையீட்டு மனுதாரரான தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் அமல்படுத்த இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT