சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கடந்த 7 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத நிலையில், வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் தனி அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த சங்கத்துக்கான தேர்தலை நடத்தக் கோரி வழக்கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்துக்கான உறுப்பினர் பட்டியலை இறுதி செய்து தேர்தலை நடத்த வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஆர்.செல்வம், ஆர்.கிருஷ்ணகுமார், திருவேங்கடம், பர்வீன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2026 ஜன.28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தலை எதிர்த்து கூட்டுறவு சங்க தனி அதிகாரி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் அமர்வில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்க தனி அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம், “வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கை தனி நீதிபதி விசாரிக்க முடியாது. தேர்தலை நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது” என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து, இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.