மதுரை தத்தனேரி சுடுகாட்டு காளி கோயிலில் சிறப்பு பூஜை செய்த சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டி.
மதுரை: வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக காளி கோயிலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சிறப்பு பூஜை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கரபாண்டி.
டைல்ஸ் ஒட்டும்தொழில் செய்து வருகிறார். வருமானத்தில் ஒரு பகுதியை சமூகப்பணிகளுக்குச் செலவிடுகிறார். வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவர் மதுரை முழுவதும் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் முறைகேடாக வழங்கி ஜனநாயக படுகொலை செய்யும், ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்து தேர்தலில் தோல்வி அடைய வேண்டும்.
மேலும், தமிழகத்தில் நடைபெற இருக்கும் பேரவைத் தேர்தல், ஐனநாயக முறைப்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலோடு மதுரை தத்தனேரி சுடுகாட்டு காளியிடம் சிறப்பு பூஜை நடைபெறும் எனக் கூறியிருந்தார்.
அதன்படி சங்கரபாண்டி பூஜை பொருட்களுடன் கோயிலுக்கு நேற்று வந்தார். இதற்கு போலீஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் அனுமதியுடன் விளக்கு ஏற்றி பூஜை செய்துவிட்டு திரும்பினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, வாக்குக்குப் பணம் தருவதை ஒழிக்கவே பூஜை நடத்தினேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு அடிப்படை பணிகள் அனைத்தையும் செய்து கொடுப்பேன். லஞ்சம்வாங்காமல் பணி செய்வேன் என்றார்.