விருதுநகர்: விருதுநகரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சட்டை அணியாமல் வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் அருகேயுள்ள சத்திரரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் அமிர்தபாண்டி (30). இவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது மேலாடை இன்றி கால் சட்டையுடன் வந்த அவரை நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினார்.
“இன்றைய அடிதட்டு மற்றும் ஏழை, எளிய மக்களின் நிலை வறுமையில் இருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில்தான் மேலாடை இன்றி வந்ததேன்” என்று கூறி அவர் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் நன்னடத்தை விதிகளை பின்பற்றி முறைப்படிதான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர் அதே இடத்திலேயே சட்டை அணிந்தார். பின்னர், மனு தாக்கல் செய்ய வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.