சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட சென்னையில் 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்துள்ளது.
இதுஒருபுறம் இருக்க பணம், பரிசு பொருட்களை கொடுத்து அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் தொகுதிதோறும் பறக்கும் படைகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள் சென்னையில் 3 இடங்களில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக சென்னை சாஸ்திரி நகர் 11-வது குறுக்குத் தெருவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தினர்.
இது முன்னாள் முதல்வரான கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேஷுக்கு சொந்தமான வீடு என கூறப்படுகிறது.
இதேபோல், அதே பகுதியில் உள்ள தொழில் அதிபரான வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் வேப்பேரி இ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் பைனான்சியரான பிரவீன் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அவர்களுடன் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,
சோதனை நடைபெற்றதற்கான காரணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. முக்கிய நபர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.