மு.அப்பாவு, இன்பதுரை
சென்னை: கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திமுக வேட்பாளர் மு.அப்பாவு வெற்றி பெற்றதாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரையும், திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரான மு.அப்பாவு ஆகியோரும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவி்க்கக்கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ல் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ராதாபுரம் தொகுதியில் ஏற்கெனவே திமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளேன். இந்த தேர்தலில் என்னை எதிர்த்து அதிமுக சார்பில் இன்பதுரை உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணும்போது தபால் வாக்கு எண்ணுவதை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.
அதன்பிறகு, அதிமுகவினருடன் சேர்ந்து அதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டனர். திடீரென என்னையும், திமுக முகவர்களையும் வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
எனக்கு கிடைத்த 203 தபால் வாக்குகளை தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் செய்துள்ளதாக கூறி செல்லாது என அறிவித்து நிராகரித்தனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையை விட 599 வாக்குகள் அதிகம் பெற்று நான்தான் வெற்றி பெற்றேன்.
ஆனால் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது சட்டவிரோதம் என்பதால் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்.
நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’’ என கோரினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2019 அக்.1 அன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி 2019 அக்.4 அன்று உயர் நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முடிவுகளை அறி விக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்து விட்டதால் 2016-ல் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிலுவையில் வைத்திருப்பது தேவையற்றது எனக்கூறி அந்த வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தபால் வாக்குகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் அளிக்க முடியும் என்பதால் மறு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தபால் வாக்குகளில் அப்பாவு 153 வாக்குகளை பெற்றுள்ளார். அதன்மூலம் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார்.
எனவே அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது. தற்போதைய சூழலில் இன்பதுரையை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றாலும், 2016- 2021 காலகட்டத்தில் சட்டப்பேரவை பதிவேடுகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் ராதாபுரம் தொகுதிஎம்எல்ஏ என்ற இடத்தில் இன்பதுரை பெயரை நீக்கிவிட்டு, அப்பாவு பெயரை இடம்பெறச் செய்ய சட்டப்பேரவைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல தவறான முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை இந்த காலகட்டத்துக்கு எம்எல்ஏ என்ற முறையில் பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை கோர முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவே இந்த தேர்தல் வழக்கில் முடிவு எடுக்க 10 ஆண்டுகள்தாமதமாகிவிட்டது. நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் இதுபோன்ற தேவையற்ற தாமதங்கள் ஜனநாயகத்தின் ஆன்மாவை வேரோடு வீழ்த்தி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதே ரீதியில் இந்திய நீதித்துறையின் வருங்கால பயணம் அமைந்தால் நம்முடன் சுதந்திரம் பெற்ற மற்ற அண்டை நாடுகளில் நிலவும் சூழல் இந்தியாவிலும் அரங்கேறிவிடும்.
இவ்வாறு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். தீர்ப்பு குறித்து முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறும்போது, ‘‘10 ஆண்டுகள் தாமதமாக இந்த தீர்ப்பு கிடைத்தாலும் எனது 10 ஆண்டுகால மன உளைச்சலுக்கு வலி நிவாரணியாக நீதி கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான்’’ என்றார்.
இந்நிலையில் தற்போது அதிமுக எம்.பி.யாக பதவி வகிக்கும் ஐ.எஸ்.இன்பதுரை, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.