பழநி பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தில் பக்தர்களின் வசதிக்காக செயல்பட்டு வரும் இலவச வாகன நிறுத்தம்.
பழநி: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், தனிநபர்களுக்கு அண்மையில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நிலத்தில் தங்கி இளைப்பாறவும், அன்னதானம் வழங்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் கோயில் கட்டளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், காலப்போக்கில் இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்தனர்.
இதுதொடர்பாக, பழநி தேவஸ்தானம் சார்பில் உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள், தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையரை தக்காராக நியமித்ததுடன் இந்த நிலத்தை தேவஸ்தானத்துடன் இணைத்தும் உத்தரவிட்டன.
இதையடுத்து, தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், தக்கார் மற்றும் பழநி கோயில் இணை ஆணையருமான மாரிமுத்து தலைமையில் 60 ஆண்டுக்கு பிறகு கடந்த 2025 செப்.12-ம் தேதி மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி ஆகும். தற்போது அந்த நிலத்தில் பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்தம் அமைத்து, பயன்பாட்டில் உள்ளது.
இதற்கிடையே, பழநி இணை சார் பதிவாளர் கடந்த 2-ம் தேதி பணி மாறுதலில் சென்ற நிலையில், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த மற்றொரு இணை சார் பதிவாளர் மூலம் 6-ம் தேதி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம் சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த பத்திரப்பதிவுகளை ரத்து செய்யக் கோரி, பதிவுத்துறை தலைவர், துணைத் தலைவர், மாவட்டப் பதிவாளர் ஆகியோருக்கு பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிக்கை அனுப்பியுள்ளார்.