பல்லாவாத்தில் ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து வாக்கு சேகரித்த கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து.
பல்லாவரம்: அதிமுக கூட்டணி சார்பில் பல்லாவரம் தொகுதியில் ஐ.ஜே.கே வேட்பாளர் வி. வெங்கடேசனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அஸ்தினாபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள படவேட்டம்மன் கோயில் அருகே, ரவி பச்சமுத்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசிய தாவது: பல்லாவரம் தொகுதி மக்களுக்கும் எங்களுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. இந்த பல்லாவரம் தொகுதி எங்களது ஐயாவுக்கும் நமக்கும் புதியபகுதி அல்ல.
இங்கு படித்தவர்கள் அதிகம், எனவே நல்லாட்சிக்கான மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியும், மாநிலத்தில் பழனிசாமி தலைமையிலான ஆட்சியும் அமைவதே தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்தது.
எம்.ஜி.ஆர் முதல் பழனிசாமி வரை அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்திய வர்கள். எம்.ஜி.ஆர். பாதையில், தற்போது பழனிசாமியும் கல்விக்கு மட்டுமல்லாமல் மருத்துவத் துறைக்கும் அதீத முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
வாகன பிரச்சாரத்தின் போது, அதிமுக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று ரவி பச்சமுத்துவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.