இந்த முறை எந்தக் கட்சி ‘எவ்வளவு வரைக்கும்’ கொடுக்கும் என வாக்காளப் பெருங்குடி மக்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்ட நிலையில், ஓட்டுக்கு சம்திங் வாங்க மாட்டேன் என வாட்ஸ் தகவல் அனுப்பினால் குலுக்கல் முறையில் ஒருவருக்கு தங்கக் காசு தருவதாக பிரகடனம் செய்திருக்கிறார் மதுரைக்கார சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன்.
‘தமிழ்நாடு சாக்கடை ஒழிப்புக் கட்சி’யின் தலைவரான சங்கரபாண்டியன், தனது வார்டுக்கு உட்பட்ட மக்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வதில் உதவி செய்து வருகிறார். அப்படி விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுக்கும் சாக்கில், ‘ஓகே எஸ்ஐஆர் ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டேன்’ என்று டைப் செய்து தனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினால் அவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஜனவரி 27-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தில் அவருக்கு ஒரு கிராம் தங்க காசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை போஸ்டராக அடித்து ஒட்டி இருக்கும் சங்கரபாண்டியன், “மற்றவர்கள் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று சொல்லுமளவுக்கு இதே மதுரை மாவட்டத்தில் தான் ஓட்டுக்கு காசு கொடுத்து மோசமான வரலாற்றை உருவாக்கினார்கள். அதே மதுரையில் இருந்து எனது இந்த சிறிய முயற்சியை செய்திருக்கிறேன். போஸ்டரைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை அனுப்பிக் குவித்து வருகிறார்கள் மக்கள். அதில் ஒருவருக்கு ஒரு கிராம் தங்கக் காசை நிச்சயம் வழங்குவேன்’’ என்றார்.