நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“தவெகவுடன் பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது” - நயினார் நாகேந்திரன்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “விஜய் கட்சியிலிருந்து எங்களுடன் யாரும் கூட்டணிக்காகப் பேசவில்லை; நாங்களும் அவர்களிடம் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது” என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர் வரும்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும். மற்றபடி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பின்னர் அறிவிப்போம். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யவே 10 நாட்கள் அவகாசம் உள்ளது.

அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை சுதந்திரமான அமைப்புகள். பிரச்சினையில் சிக்கியவர்கள் மீதுதான் இந்த அமைப்புகள் விசாரணை நடத்தும். புதிதாக வழக்குப் பதிவு செய்தால் அமலாக்க துறையை வைத்து நாங்கள் மிரட்டுவதாகச் சொல்லலாம், ஆனால், கடந்த தேர்தலுக்கு முன்னரே தற்போது விசாரணை நடக்கும் அனைவர் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவாகியுள்ளது.

          

விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர் மீது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வழக்குகள் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே திமுகவினர் சிலர் மீது வழக்கு இருக்கும் சூழலில், அதை வைத்து மிரட்டுவதாக இப்போது சொன்னால் சரியானதாக இருக்குமா?

நீங்கள் சொல்லும் யாருடனும் நாங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை பாஜக மாநிலத் தலைவர் என்கிற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் கட்சியில் இருந்தும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை அப்படி இல்லாத பட்சத்தில் ‘பிம்பம், கம்பம்’ என்பதெல்லாம் தேவையில்லாதது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

தொடர்ந்து, “80 தொகுதிகள், துணை முதல்வர்” போன்ற ஆஃபர் கொடுப்பதாக ஆதவ் சொல்கிறாரே எனக் கேட்டதற்கு, “ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது என்றார்.

‘ஜனநாயகன்’ படத்திற்கு நெருக்கடி கொடுப்பது பாஜக தான் என கேள்வி எழுந்து வருகிறதே! என்ற கேள்விக்கு, “மத்திய அரசின் அமைப்புகளை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவை அனைத்தும் சுதந்திரமான அமைப்பு. அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படும் அதில் சம்பந்தமில்லாதவர்கள் மீது எப்படி விசாரணை நடத்த முடியும்.” என்றார்.

பிரதமர் வருகிறார்: மேலும் அவர் பேசுகையில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூருக்கு வர உள்ளார் அவர் வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபீன் என அகில இந்திய தலைவர்கள் பலரும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் போன்றோரும் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரவுள்ளனர்.

திமுக கூட்டணிக் கட்சிகளின் சீட் குறைக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட்டை மக்களும் குறைப்பார்கள்.

பாரதிய ஜனதா கட்சி சாதியைச் சார்ந்தோ; மதத்தைச் சார்ந்தோ உள்ள கட்சி கிடையாது. மதம் சார்ந்த கட்சி என்றால் அது திமுக தான். அதனை மறுப்பு இல்லாமல் பகிரங்கமாக என்னால் சொல்ல முடியும். ‘இந்துக்கள் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம்’ என வெளிப்படையாக முதல்வர் சொல்லி உள்ளார். பாஜக அப்படியல்ல இஸ்லாமிய அமைப்புகளாக இருந்தாலும் நேரடியாக அவர்கள் நிகழ்வில் பங்கேற்கிறது. கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நிகழ்வில் பங்கேற்கிறது,” என்றார்.

தொடர்ந்து அவர், “இந்த நல்ல நாளில் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெலுங்கில் வாழ்த்து கூறினார்.

SCROLL FOR NEXT