சென்னை: பணி மூப்பின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகவரித் துறை அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, நந்தனத்தில் உள்ள வணிகவரித் துறை தலைமை அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வணிகவரித் துறை ஒன்றியம் சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஆலிஸ் ஷீலா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள், "வணிகவரித் துறையில் பணி மூப்பின் அடிப்படையில், உதவியாளர்களுக்கு உடனடியாகத் துணை வணிகவரி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் போது மூன்றில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும். மற்ற காலி இடங்களுக்கு பணி மூப்புப் பட்டியலில் உள்ள உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அனைத்துக் காலிப் பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்ப அரசு திட்டமிட்டு வருவது பாதிப்பை ஏற்படுத்தும். துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு ஓராண்டு காலமாகியும், இன்னமும் பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள 308 பேருக்கு உடனடியாகப் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதுதவிர, 1981-ம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட பணி மூப்புப் பட்டியலின் அடிப்படையில், உதவி ஆணையர் மற்றும் மாநில வரி அலுவலர் பதவி உயர்வுப் பட்டியல்களைத் தகுந்த முறையில் திருத்தி வெளியிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் அதிகாரிகள் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவைப்படுவதால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
எனினும், ஏற்கனவே பலமுறை அரசுத் தரப்பில் இதேபோல உறுதியளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, அதிகாரிகள் கொடுத்த கால அவகாசத்தை ஏற்க மறுத்து ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை, இன்றும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப் போவதாகத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.