சென்னை: கோயில்களில் கொடிமரம் பிரதிஷ்டை செய்ய ஆணையரிடம் 15 நாட்களுக்கு முன்பு அனுமதிபெற வேண்டும். முற்றிலும் ஆகம விதிகளின்படியே கொடிமரம் அமைக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.ஜி.வினய் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோயில்களில் பழுதான பழைய கொடிமரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்கவோ, புதிதாக கட்டப்பட்ட கோயில்களில் கொடிமரம் நிறுவவோ ஆணையரின் முன்அனுமதி பெறுவது அவசியமாகும். பட்டியல் சார்ந்த மற்றும் பட்டியல் சாராத அனைத்து கோயில்களுக்கும் இது பொருந்தும்.
புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக ஆணையரின் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் அந்தந்த கோயில் செயல் அலுவலர் அல்லது அறங்காவலர்களின் தீர்மான நகல், மண்டல ஸ்தபதியின் கருத்துரு, வரைபடக் குழுவின் பரிந்துரை, கோயில் அர்ச்சகரின் கடிதம், முகூர்த்தப் பத்திரிகை, புதிய கொடிமரத்தின் வண்ணப் புகைப்படம், பழைய கொடிமரம் அகற்றப்பட்டதற்கான ஆணையர் உத்தரவு நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
உபயதாரர்கள் மூலம் கொடி மரம் வழங்கப்பட்டால், அவர்களது சம்மதக் கடிதம் மற்றும் நிதி ஆதாரத்துக்கான சான்றுகளை இணைக்க வேண்டும். புதிய கொடிமரத்துக்கு தங்கம், வெள்ளி, செப்புக் கவசங்கள் பொருத்த வேண்டும் என்றால் அதற்கு தனியாக அனுமதி பெறவேண்டும். இதுவரை கொடிமரம் இல்லாமல், முதல்முறையாக ஒரு கோயிலில் கொடிமரம் நிறுவப்படுகிறது என்றால், மண்டல,மாநில அளவிலான நிபுணர் குழுவின் தீர்மானம் மற்றும் ஆகம வல்லுநர்களின் (சிவாச்சாரியார்/ பட்டாச்சாரியார்) கருத்துருவைப் பெறுவது அவசியம்.
கொடிமரம் அமைக்கும் பணி முற்றிலும் ஆகம விதிகளின்படியே நடைபெற வேண்டும். மண்டல உதவி அல்லது துணை ஆணையர் முன்னிலையிலும், மண்டல ஸ்தபதி மற்றும் பொறியாளர்களின் ஆலோசனைப்படியும் இப்பணிகள் நடைபெற வேண்டும். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமலும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தும் கொடிமரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பழைய கொடிமரத்தின் அடியில் விலை உயர்ந்த பொருட்கள்ஏதேனும் கண்டெடுக்கப்பட்டால், அதுபற்றிய விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, புதியகொடிமரத்தின் அடியில் அவற்றை மீண்டும் வைக்க வேண்டும். பணிகள் தொடக்கம் முதல் நிறைவு வரை முழுமையாக வீடியோ, புகைப்படம் எடுக்கப்பட்டு, கோயில் பதிவேட்டில் நிரந்தரமாக பாதுகாக்கப்பட வேண்டும்.பணிகள் முடிந்ததும் அதுகுறித்த விரிவான அறிக்கையை வீடியோ ஆதாரத்துடன் ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.