படம்: ஜெ.மனோகரன்
கோவை: “பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை, தென் மாநிலங்களை மிக மிக பாதிக்கும்” என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
கோவையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தொகுதி மறுவரைறைக்காக, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம். மக்களவை எண்ணிக்கையை அதிகரித்து பின் மறுசீரமைப்பு என சொல்வது மாயை. டீலிமிட்ஷன் என்பது உடனடியாக தெரிந்து விடும். 39 தொகுதிகள் என்பது 32 ஆக குறையும்போது, அது உடனடியாக அனைவருக்கும் தெரிந்து விடும்.
ஆனால், மக்களவையில் 50 சதவீத எண்ணிக்கையை உயர்த்திவிட்டு செய்வது என்பது மாயை. 50 சதவீதம் உயர்த்தும்போது தமிழகத்தில் 58 தொகுதிகளாக உயரும் எனவும், டீலிமிட்டேஷனுக்கு பின்பு அது 46 ஆக குறையும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் தற்போதுள்ள 80 மக்களைவை தொகுதிகள் 120 தொகுதியாக உயரும். டீலிமிட்டேஷனுக்கு பின்பு அது 140 ஆக அங்கு உயரும். இந்த மறுவரையறை என்பது தென் மாநிலங்களை மிக மிக பாதிக்கும்.
மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினர்களில் 24.3 சதவீதம் உறுப்பினர்கள் இந்த தென்மாநிலங்களில் உள்ள 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள். இது 20.7 சதவீதமாகிவிடும். நாடாளுமன்ற வாக்கு சதவீதம் குறைக்கப்பட்டு, தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் 29-ம் தேதி இந்தக் கூட்டத்தை கூட்டலாமே... ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டுகின்றனர்? மேற்கு வங்கம், தமிழகத்தை சேர்ந்த 67 எம்.பிகள் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என நினைக்கின்றனர். காங்கிரஸ், திமுக, தோழமைக் கட்சிகளை சேர்ந்த 39 பேரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி 5 நாட்கள் தேர்தல் வேலை தீவிரமாக நடக்கும். இந்த நேரத்தில் பிரச்சாரத்தை முடக்கவே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது திட்டமிட்ட சதி. அதிமுக பொது செயலாளர் பழனிசாமி இந்த தொகுதி மறுவரையறையால் என்ன பாதகம் ஏற்படும், என்ன பாதகம் ஏற்படாது என்று சொல்ல வேண்டும். ஆனால், பழனிசாமி அளித்த பதில் அதிர்ச்சியை தருகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை கேட்டேன், அவர் பாதகம் வராது என்று சொன்னார், அதனால் பாதகம் வராது என்கின்றார்.
இந்த தொகுதி மறுவறையறை என்பது ஏமாற்று வித்தை. இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் சொன்ன கணக்கில் என்ன பிழை என்பதை பழனிச்சாமி சொல்ல வேண்டும். பா.ஜ.கவினர் சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார். பழனிசாமியால் முதல்வராக முடியாது. அரசியல் விபத்து நடந்து பழனிசாமி முதல்வரானால், பிஹாரைப் போல் இங்கும் நடக்கும். 39 மக்களவை தொகுதியை 58 ஆக மாற்றி பின்னர் டீலிமிட்டேஷனில் 46 ஆக குறைப்பார்கள். அவ்வளவு ஏமாளிகளா தமிழக மக்கள்?
பா.ஜ.க நேரடியாகவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றது. மேற்கு ஆசியா போர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நாள்தோறும் ஒத்திவைப்பு தீர்மானம். போர் குறித்து கொண்டு வந்தாலும் அதை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் இரு தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்வதாக தகவல்கள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் முழு பலம் இருந்தால், இந்த அரசியல் திருத்த மசோதா தோற்கடிக்கபடும். இந்த விவகாரத்தில் பழனிசாமியின் புரிதலை பற்றி எனக்கு புரியவில்லை” என்றார் ப.சிதம்பரம்.