சென்னை: வீட்டுவசதி வாரியத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதாக அதிகாரியுடன் ஒப்பந்ததாரர் பேசிய ஆடியோ வெளியான நிலையில் டெண்டரை ரத்து செய்து வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 22 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு வீட்டுக்கும் பெயர்ப் பலகை வைக்கும் பணிக்காக ரூ.33 லட்சம் மதிப்பிலான டெண்டர் கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஆக.20-ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டிருந்தது.
குறைவான அவகாசமே இருந்ததால், பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர், “வெறும் 5 நாட்களில் எப்படி டெண்டர் விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல, விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் பயன்படுத்த முடியால் உள்ளது” என்று கூறியுள்ளார்.
“குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும்” என்று அதிகாரி கூற, “வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தப் புள்ளிகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளதே” என்று அந்த ஒப்பந்ததாரர் கேட்கிறார்.
இந்த போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. போதிய அவகாசம் இல்லை இந்நிலையில், “போதிய அவகாசம் இல்லாதது மற்றும் நிர்வாக காரணங்களுக்காக பெயர்ப் பலகைக்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது” என்று வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.