சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வை ஜூன் மாதம் இணையவழியில் நடத்த உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் வி. அருண் ராய் வெளியிட்டுள்ள அரசாணை: நடப்பு கல்வி ஆண்டில் (2026-2027) அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் மாதத்தில் நடத்த அனுமதித்து ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கருத்துருவை ஏற்று, வெளிப்படைத்தன்மை யுடன் இணையவழி வாயிலாக ஜூன் மாதம் கலந்தாய்வு நடத்த கல்லூரி கல்வி ஆணையருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
தமிழக அரசுக்கு கோரிக்கை
இதற்கிடையே, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: இதுவரை பணி இடமாறுதல் கிடைக்காத அனைவருக்கும் பணி இடமாறுதல் வழங்கும் வகையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுகிறோம்.
2015-ம் ஆண்டுக்குப் பிறகு பணி நியமனம் இல்லாத சூழலில் ஒரு துறையில் ஒரு நிரந்தர ஆசிரியர் மட்டுமே பணியாற்றக் கூடிய நிர்பந்தத்தில், அந்த ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் இதுவரை வழங்கப்படவில்லை.
அதேபோல், ஒரு துறையில் 50 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்கள் பணியாற்றினா லும் அத்துறை ஆசிரியர்களும் பணி இடமாறுதல் பெற முடியவில்லை. அதேபோல், கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றும் இடங்களுக்கும் பணி இடமாறுதல் வழங்கப்பட வில்லை.
மேற்கண்ட மறுக்கப்பட்ட பணி இடமாறுதல் அனைத்துக்கும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கூறப்பட்டது. ஆனால், தற்போது 2708 நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறையினை காரணம் காட்டி மறுக்கப்படும் பணி இடமாறுதல் இந்த முறையும் தொடரக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
தற்போது, காலியாக இருக்கக் கூடிய இடங்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி பணி இடமாறுதல் வழங்க வேண்டும். முனைவர் பட்ட படிப்புக்கு வழிகாட்டியாக செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு நியாயமான காரணங்கள் இருந்தும், சென்னை உட்பட பல நகரங்களில் ஒரே நகரத்தில் உள்ள மற்றொரு கல்லூரிக்கு பணி இடமாறுதல் வழங்கப்படவில்லை.
இக்கல்வி ஆண்டில் நடைபெற உள்ள கலந்தாய்விலாவது, இந்த குறைபாடு சரிசெய்யப்பட வேண்டும். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே கல்லூரியில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனையும் தளர்த்தப்பட வேண் டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.