சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் மற்றும் இணையதளங்களில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
அதன்படி, கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டுமென அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் கடந்த ஜூன் 1-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
ரத்து செய்ய கோரி வழக்கு இந்நிலையில் மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்றாலும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை தங்களது பள்ளி விளம்பர பலகைகளில் வெளியிட வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.