கோப்புப்படம்
சென்னை: சாலைகளில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னையில் பெரும்பாலான சாலைகளில் பச்சிளம் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்கள், அந்த குழந்தைகளின் உண்மையான தாய் தானா என்பதை கண்டறிந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
ஏனெனில் அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பிறந்த பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க தமிழக அரசு உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை டிச.11ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.