சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனுவில் முதலீடுகள் மற்றும் வங்கி கணக்குகள் மறைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வாக்காளரான விக்னேஷ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுக்கும் முரண்பாடுகள் உள்ளன.
தற்போது வேலுமணியின் சொத்து விவரங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்களை அவர் தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. குறிப்பாக வேலுமணியின் முதலீடுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் தற்போதைய வேட்புமனுவில் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, வேலுமணியின் வருமானம் மற்றும் சொத்து விவரங்கள், முதலீடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.