சென்னை: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அத்திவரதர் அனந்த சயனத்தில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் உள்மண்டபத்தில் அனந்த சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு, கோயில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மீண்டும் அனந்த சரஸ் குளத்தின் உள் மண்டபத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்படுவார். அதன்பிறகு அந்த குளத்துக்குள் செல்லவோ, நீராடவோ யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
அந்த வகையில், கடந்த 1979-ம் ஆண்டு தரிசனம் கொடுத்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஆக.17-ம் தேதி வரை சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் அருள்பாலித்தார். உலகம் முழுவதும் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், தைலக்காப்பு பூசப்பட்டு அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தத்தா தேசிக திருவம்சத்தார் சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘ஆக.27-ம் தேதி (இன்று) ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தொடங்கும் புனித சடங்குகளின் ஒரு பகுதியாக புனித நீராடுதல் உள்ளிட்ட சடங்குகளை அவரவர் நடைமுறைப்படி மேற்கொள்ள தங்களது சபையினரையும், வேத பாராயணக்காரர்களையும், ஸ்தலத்தார்களையும் அனுமதித்து அனைத்து புனித நாட்களிலும் அனந்தசரஸ் குளத்தை திறந்து வைக்க வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘முக்கியமான புனித நாட்களில் அனந்தசரஸ் குளத்தை திறக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் கோயில் நிர்வாகம் குளத்தை மூடி, அடிப்படை மத உரிமைகள் தடுக்கப்படுகின்றன’ என்று குற்றம்சாட்டப்பட்டது.
கூட்டத்தை சமாளிக்க முடியாது
ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில், ‘புனித நீராடுவதற்காக, அத்திவரதர் சயனக் கோலத்தில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தை திறந்தால் ஏராளமான பொதுமக்கள் கூட வாய்ப்பு உள்ளது. கூட்டத்தை சமாளிக்க முடியாது. குளத்தின் புனிதமும் கெட்டுவிடும்’ என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘புனித நாட்களில் மட்டும் அனந்தசரஸ் குளத்தை திறக்கலாம் என கடந்த 2020 ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குளத்தை திறக்கக் கோரி மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம் தகுந்த முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.