செந்தில் பாலாஜி | கோப்புப் படம்.
சென்னை: குதிரை பேரம் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை எதிர்த்து வாதிட, மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாகக் கூறி காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்டதால், விசாரணையை பிற்பகலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவில், காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், செந்தில்பாலாஜியும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இருவரின் முன் ஜாமீன் வழக்குகளில் எதிர்த்து வாதிடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், வழக்கில் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்க வேண்டுமென சென்னை காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.