கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்க மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, யானைகள் வழித்தடங்களை கண்டறிய, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழகத்தில் ஜவாலகிரி - தக்கட்டி, ஜவாலகிரி - அஞ்செட்டி, பில்லிக்கல் - ஜவாலகிரி ஆகிய மூன்று பகுதிகளை, யானைகள் வழித்தடங்களாக அறிவித்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
யானைகள் வழித்தடங்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வேணு பிரசாத், ‘தமிழக அரசு அமைத்துள்ள குழு, 41 பகுதிகளை யானைகள் வழித்தடங்களாக அடையாளம் கண்டுள்ளது. இந்த 41 பகுதிகளையும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுப் பணிகளை முடித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்க மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி, விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.