பழநி முருகன் கோயில் 
தமிழகம்

தனியார் பெயரில் பழநி கோயிலின் ரூ.100 கோடி நிலம்: பத்திரப் பதிவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

கி.மகாராஜன்

மதுரை: பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கோயிலின் தக்கார் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை.

இருப்பினும் கோயில் நிலத்தை பதிவு செய்ய தனி நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இது சட்டவிரோதமானது. எனவே பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலேயே மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. அரசுத் தரப்பில், நீதிமன்றத்தில் முழு விவரங்களையும் தெரிவிக்காமல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதனால் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் பதிவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நிலத்தை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வழக்கமான சார் பதிவாளர் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். பொறுப்பு பதிவாளர் நியமிக்கப்பட்டு முறைகேடாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நிலத்தை பதிவு செய்வதற்கு முன்பு கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்டிருக்க வேண்டும். அதன் பிறகே பதிவுக்கு அனுமதி கோரியிருக்க வேண்டும்.

சொத்து தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதை சார் பதிவாளர் தரப்பில் தனி நீதிபதியிடம் தெரிவித்து இருக்க வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் உண்மையை மறைத்து தனி நீதிபதியிடம் உத்தரவு பெற்றுள்ளனர். முறையான நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல், முழு விபரங்களை தெரிவிக்காமல் தனி நீதிபதி முன்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்காமல், நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்காமல் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதனால் இந்த பத்திரப்பதிவு செல்லாது. முழு தகவல்களையும் தெரிவிக்காமல் தனி நீதிபதியை தவறாக வழிநடத்தியுள்ளனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் பழநி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவு செல்லாது என அறிவிக்கப்படுகிறது. வழக்கு முடிக்கப்படுகிறது.” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT