மதுரை: காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர்களுக்கான அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும், உள்துறை செயலாளர் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நல்லதம்பி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: காவல்துறை அதிகாரி களுக்கு நிர்வாக நடுவருக்கான (எக்ஸ்கியூட் மாஜிஸ்திரேட்) அதிகாரங்களை வழங்கி தமிழக உள்துறை செயலர் கடந்த 2025 டிச.4-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். காவல் துணை ஆணையர்களுக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் வழங்குவது சட்டவிரோதமானது. ஜாமீன் விதிமீறலுக்காக ஒருவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நீதித்துறை சார்ந்தது. அந்த அதிகாரங்களை காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைக்கு எதிரானது.
மேலும் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே சிறப்பு நிர்வாக நடுவர்களை நியமிக்க முடியும். இதை மீறும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கு காலவரம்பு இல்லாமல் நீதித்துறை நடுவர் அதிகாரங்களை வழங்கி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதம். இந்த அரசாணை குடிமக்களின் தனி மனித சுதந்திரத்தை பறிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவம் மற்றும்சுதந்திரமாக வாழும் உரிமையை பாதிக்கிறது. எனவே காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவருக்கான அதிகாரங்களை வழங்கும் அரசாணையை செல்லாது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. நேற்று இந்த மனு மீண்டும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதொடர்பாக உள்துறை செயலாளர் பதிலளிக்கவும், அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.