அமைச்சர் மரிய வில்சன்
சென்னை: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, நான்கு முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மரிய வில்சன் தரப்பில், இந்த பிரச்சினையில் இரு தரப்பிலும் சமரச தீர்வு மையத்தில் அடுத்த வாரத்தில் தீர்வு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘சமரசம் செய்துகொள்ள முடியாத குற்றச்சாட்டுக்களின் கீழ் பதிவு செய்துள்ள வழக்கை, சமரச தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பலாம் என உத்தரவுகள் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும்’ என மரிய வில்சன் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.