கூடலூர்: கூடலூர் அருகே வனவிலங்கு (புலி?) தாக்கியதில் தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார். உடலை உறவினர்களிடம் காட்டாமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டி,வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியுள்ளதால் வனவிலங்குகள்அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் மனித உயிரிழப்புஅவ்வப்போது நிகழ்கிறது.
இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சி 4-ம் கேட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி பாலு (எ) பாலகிருஷ்ணன் (58), நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் நேற்று வனத் துறைக்கு தகவல் தெரிவித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனவிலங்கு தாக்கி உயிரிழந்த நிலையில் பாலகிருஷ்ணன் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், உடலை உறவினர்களிடம் காட்டாமல் அனுப்பியதாகக் கூறி, பாலகிருஷ்ணனின் உறவினர்கள் வனத் துறையினர் மற்றும் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சூழல் நிலவியது.
மேலும், கூடலூர் பகுதியில் தொடர்ந்து வன விலங்குகள் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் நடைபெற்று வருவதைக் கண்டித்து, மனித-வனவிலங்கு மோதல்களைத் தடுக்க வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
கண்காணிப்பு: இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் கூடுதலாக வனப்பணியாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்மூலம் கண்காணிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.