தமிழகம்

‘கிராம சபைகளை வலுப்படுத்த வேண்டும்’ - முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தி, அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாடு மக்கள் உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர். உங்கள் தலைமையில், அரசை மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் மக்களாட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

வருகிற 2 அக்டோபர் 2026 அன்று தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், கிராம சபையை மிகவும் பயனுள்ள மற்றும் வலுவான மக்களாட்சி அமைப்பாக மாற்ற சில கோரிக்கைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243A-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கிராம சபை, மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் ஜனநாயகத்தின் மிக முக்கிய வடிவமாகும். இங்குதான் பொதுமக்கள் ஒன்றாகக் கூடி, தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்து, ஊர் தொடர்பான பிரச்சினைகளை விவாதித்து, உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் கிராம சபைகளைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு 30 ஆண்டுகால நெடிய அனுபவத்தைக் கொண்டுள்ளது. இக்கால கட்டத்தில் அமைந்த அரசுகள் கிராம சபை அமைப்புகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உங்களது தலைமை, அந்த அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, கிராம சபையை அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதாகவும், அதிகாரமிக்கதாகவும் மாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இது தொடர்பாக, நான் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது பரிசீலனைக்கு வழங்குகிறேன்:

1. பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை (Honorarium) கணிசமாக உயர்த்துதல்

கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஆவர். அவர்கள் மிகப்பெரிய பொறுப்புகளைச் சுமக்கிறார்கள்.

தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியமானது மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் மாதாந்திர மதிப்பூதியமானது 2021-ல் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு இந்த மாதாந்திர மதிப்பூதியத்தை பின்வருமாறு கணிசமாக உயர்த்தப் பரிசீலிக்க வேண்டும்:

* கிராம பஞ்சாயத்து தலைவர்: மாதம் ரூ.16,000

* கிராம பஞ்சாயத்துத் துணைத் தலைவர்: மாதம் ரூ.10,000

* கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்: மாதம் ரூ.8,000

அடித்தட்டு நிர்வாகத்தில் அவர்கள் செலவிடும் நேரம், பொறுப்பு மற்றும் மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டு இந்த உயர்வு வழங்கப்பட வேண்டும்.

2. உள்ளூர் டாஸ்மாக் கடைகள் குறித்த முடிவில் கிராம சபைக்கு அதிகாரம் அளித்தல்

கிராமங்களில் மதுக்கடைகள் அமைப்பது தொடர்பான முடிவுகளில் உள்ளூர் மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். முறையாகக் கூட்டப்பட்ட கிராம சபையில், ஒரு டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் தீர்மானம் நிறைவேற்றினால், தகுந்த நடைமுறைகளுடன் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் அக்கடையை மூடுவதற்கான அதிகாரத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.

அதேபோல, ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு முன்பும் கிராம சபையின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும். அரசின் வருவாயைக் காட்டிலும், உள்ளூர் மக்களின் சமூக நலனுக்கும் அவர்களின் கூட்டுக் குரலுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

3. விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் மாதிரி கிராம சபைகளை நேரலை செய்தல்

கிராம சபையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் அரசு தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சிறந்த கிராம சபைக் கூட்டங்களை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேரலை செய்ய வேண்டும். இது ஒரு முன்மாதிரியான துடிப்பான கிராம சபை எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்களுக்குக் காட்டி, மாநிலம் முழுவதும் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும். மேலும், கிராம சபைக் கூட்டங்களுக்கு முன்பாகச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக அரசு விழிப்புணர்வுச் செய்திகளை வெளியிடலாம்.

4. கிராம சபை தீர்மானங்களைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல்

கிராம சபையின் நம்பிக்கை என்பது கூட்டம் முடிந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளில்தான் உள்ளது. கிராம சபை தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; மேலும் அதன் விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை (Action Taken Report), அடுத்த கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தங்கள் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை மக்கள் உணரும்போது, கிராம சபையின் மீது நம்பிக்கை அதிகரித்து, மக்கள் பங்கேற்பும் இயல்பாகவே உயரும்.

5. கிராம சபை விவாதப் பட்டியலில் (Agenda) மக்களுக்கு அதிக வாய்ப்பளித்தல்

கிராம சபைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பே பொது அறிவிப்பும், விவாதப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும் என்ற அரசின் விதியைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். கூடுதலாக, கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய தலைப்புகளைப் பொதுமக்கள் முன்மொழிவதற்கு எளிமையான வழிமுறை இருக்க வேண்டும். மக்கள் முன்மொழியும் தலைப்புகள், தகுந்த நடைமுறைகளுக்கு உட்பட்டு கிராம சபையின் விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும்.

டெங்கு தடுப்பு, பேரிடர் ஆயத்தம், நீர் மேலாண்மை போன்ற மாநில அளவிலான முக்கிய விஷயங்களை அரசு கிராம சபையின் விவாதத்திற்கு வைக்கலாம். ஆனால், அவை உள்ளூர் மக்கள் எழுப்பும் கோரிக்கைகளுக்குப் பதிலாக இல்லாமல், கூடுதல் தலைப்புகளாகவே இருக்க வேண்டும்.

6. உள்ளாட்சிப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல்

மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கும் கட்டமைப்பு தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளது. இருப்பினும், உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் முறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். கிராம சபையின் செயல்பாடு, மக்கள் பங்கேற்பு நிர்வாகம், பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் பஞ்சாயத்து நடைமுறைகளில் அதிகக் கவனம் செலுத்தும் வகையில், கூடுதல் அதிகாரமும் பரந்த பயிற்சித் திட்டங்களும் கொண்ட ஒரு வலுவான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

7. கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்தல்

கிராமங்கள் தங்களின் வளர்ச்சித் தேவைகள் குறித்து விவாதித்து, தேவைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டும் இடமாக கிராம சபைகள் மாற வேண்டும். அரசு ஏற்கனவே முடிவு செய்த திட்டங்களை மக்களிடம் தெரிவிப்பதாக மட்டும் இல்லாமல்; குடிநீர், சுகாதாரம், சாலைகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த தங்களின் தேவைகளை மக்களே நேரடியாகக் கூறி, கிராம பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டத்தை (VPDP) உருவாக்குவதில் நேரடியாகப் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.

8. அடித்தட்டு அளவில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உருவாக்குதல்

மக்களாட்சியின் பலம் என்பது, மக்கள் எந்த அளவுக்குப் பொது அமைப்புகளைக் கேள்விகள் கேட்டு பொறுப்பேற்கச் செய்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. எனவே, கிராம சபை என்பது வெறும் சட்டப்பூர்வமான சம்பிரதாய கூட்டமாக மட்டும் இல்லாமல், மக்கள் கேள்விகள் கேட்கவும், விவாதிக்கவும், உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொறுப்பேற்கச் செய்யவும் கூடிய உண்மையான தளமாக உயர வேண்டும்.

வரவிருக்கும் அக்டோபர் 2, 2026 கிராம சபைக் கூட்டங்கள், இந்தச் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தி அடித்தட்டு ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஒரு நல்ல வாய்ப்பாகும்.

நீங்கள் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உங்கள் தலைமையில் தமிழ்நாட்டின் கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT