சென்னை: எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 2026-27 நிதியாண்டுக்காக ரூ.828 கோடி நிதி ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.702 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டு, அதற்கான நிதியையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அரசிடம் பரிந்துரைத்தார்.
அவரது கருத்துருவை பரிசீலனை செய்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் பிரசாந்த் மு.வடநெரே வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3.54 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்காக மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 2026-27-ம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை விடுவிக்க அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் புதிய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முந்தைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதியை செலவிடக் கூடாது. ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையை பெற்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் விடுவிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.