தமிழகம்

‘எல் நினோ’ தாக்கத்தை கணிக்க பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு அமைப்பு: முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​வானிலை ஆய்​வு​களின்​படி, இந்த ஆண்டு தீவிர ‘எல் நினோ’ நிகழ்வு உரு​வாகும் வாய்ப்பு அதி​க​மாக உள்​ள​தால், அதன் பாதிப்​பு​களை முன்​கூட்​டியே மதிப்​பீடு செய்​து, உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை அமைத்து முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பசிபிக் பெருங்​கடலின் மத்​திய மற்​றும் கிழக்​குப் பகு​தி​களில் கடலின் மேற்​பரப்பு வெப்​பநிலை இயல்​பை​விட அதி​கரிப்​ப​தால் உரு​வாகும் எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்​வு, உலகளா​விய மழைப்​பொழிவு மற்​றும் வானிலை​யில் குறிப்​பிடத்​தக்க மாற்​றங்​களை ஏற்​படுத்​தக்​கூடியது ஆகும். எல் நினோ நிகழ்வு பொது​வாக 2 முதல் 7 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை உரு​வாகும். கடலின் மேற்​பரப்பு வெப்​பநிலை 2 டிகிரி செல்சி​யஸ் அல்​லது அதற்கு மேல் உயரும்​போது அது தீவிர எல் நினோ என்று கருதப்​படு​கிறது.

வானிலை ஆய்​வு​களின்​படி, 2026-ம் ஆண்டு தீவிர எல் நினோ நிகழ்வு உரு​வாகும் வாய்ப்பு அதி​க​மாக உள்​ளது. இதன் விளை​வாக, தென்​மேற்​குப் பரு​வ​மழை இயல்​பை​விட குறை​வாகப் பெய்​யக்​கூடும். மேலும், வடகிழக்​குப் பரு​வ​மழைக் காலத்​தில் அதிக மழை, வெள்​ளம் உள்​ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்​வு​கள் ஏற்​படக்​கூடும் என தெரி​கிறது.

இந்த சூழ்​நிலை​யைக் கருத்​தில்​கொண்​டு, தீவிர எல் நினோ​வால் ஏற்​படக்​கூடிய பாதிப்​பு​களை அறி​வியல் அடிப்​படை​யில் முன்​கூட்​டியே மதிப்​பீடு செய்​து, உரிய முன்​னெச்​சரிக்கை மற்​றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள முதல்​வர் விஜய் தலை​மை​யில் ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

அதன்​படி, தமிழ்​நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை​யின் (TNDRRA) கீழ் பேரிடர் மேலாண்​மைக்​கான நிபுணர் ஆலோ​சனைக் குழுவை அமைக்க உத்​தர​விடப்​பட்​டது. அந்த குழு​வில் காலநிலை மாற்​றம், பேரிடர் மேலாண்​மை, சுற்​றுச்​சூழல், கடலோர வள மேலாண்​மை, நகர்ப்​புற உள்​கட்​டமைப்பு உள்​ளிட்ட துறை​களில் அனுபவம் பெற்ற நிபுணர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

குறிப்​பாக , அண்ணா பல்​கலைக்​கழக காலநிலை மாற்​றம், பேரிடர் மேலாண்மை மையத் தலை​வர் பேராசிரியர் எஸ்​.கண்​மணி, சென்னை ஐஐடி குடி​சார் பொறி​யியல் துறை நீரியல் ஆய்​வகப் பேராசிரியர் பாலாஜி நரசிம்​மன், தமிழ்​நாடு காலநிலை மாற்ற ஆளு​மைக் குழு​வின் உறுப்​பினரும், டபிள்​யூஆர்ஐ இந்​தி​யா​வின் இயக்​குநரு​மான அறி​வுடைநம்பி அப்​பாதுரை, தமிழ்​நாடு பசுமை காலநிலை நிறுவன ஆலோ​சகர் ரமேஷ் ராமச்​சந்​திரன், மாநில சுற்​றுச்​சூழல் மதிப்​பீட்​டுக் குழு உறுப்​பினர் ஆர்​.வெங்​கடேசன், சுகந்தி தேவ​தாசன் கடல்​சார் ஆராய்ச்சி நிறுவன இயக்​குநர் ஜே.கே.பேட்​டர்​சன் எட்​வர்​டு, தமிழ்​நாடு நகர்ப்​புற உட்​கட்​டமைப்பு நிதி சேவை​கள் நிறுவன மூத்த மேலா​ளர் ஆர்​.பிரதீப் ஜான் ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர்.

மாநிலத்​தின் மழைப் பொழி​வு, வறட்சி நில​வரங்​களை தொடர்ந்து கண்​காணித்​தல், பாதிப்​புக்கு உள்​ளாகக்​கூடிய பகு​தி​களை அடை​யாளம் காணுதல், முன்​னெச்​சரிக்கை அமைப்​பு​களை வலுப்​படுத்​துதல், வறட்​சி, வெள்ள அபா​யங்​களை குறைப்​ப​தற்​கான அறி​வியல் அடிப்​படையி​லான பரிந்​துரைகளை வழங்​குதல் மற்​றும் காலநிலை மாற்​றத்​தால் உரு​வாகக்​கூடிய பேரிடர்​களை எதிர்​கொள்ள மாநில அரசின் தயார் நிலையை மேம்​படுத்​துதல் உள்​ளிட்ட பணி​களை இந்த குழு மேற்​கொள்​ளும்.

இக்​குழு​வின் பரிந்​துரைகள் அடிப்​படை​யில், தீவிர எல் நினோ​வால் ஏற்​படக்​கூடிய தாக்​கங்​களை முன்​கூட்​டியே எதிர்​கொண்​டு, மக்​களின் உயிர், வாழ்​வா​தா​ரம், உள்​கட்​டமைப்​பு​களைப் பாது​காக்​கத் தேவை​யான முன்​னெச்​சரிக்கை மற்​றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்​கைகளை தமிழக அரசு மேற்​கொள்​ளும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

வானிலை ஆய்வு மைய பிரதிநிதி இல்லை: எல் நினோவின் தாக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவில் இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி இல்லை. தமிழகத்தில் வளிமண்டலத்தைக் கண்காணிக்க பலூன் மூலம் தினமும் கருவிகளை பறக்கவிட்டு, வளிமண்டலக் காற்றின் அழுத்தம், ஈரப்பதம், திசை வேகம் உள்ளிட்ட தரவுகளை ஐஎம்டி சேகரிக்கிறது.

தமிழகத்துக்கென ஸ்ரீஹரிகோட்டா, சென்னையில் 2 இடங்கள், காரைக்கால், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ரேடார்களை நிறுவி அவற்றின் தரவுகளையும் சேகரித்து வருகிறது. தமிழகத்தில் 56 தானியங்கி வானிலை கருவிகள், 87 தானியங்கி மழைமானிகள், 11 வேளாண் வானிலை கருவிகள் என 154 இடங்களில் கருவிகளை நிறுவி தரவுகளை சேகரித்து வருகிறது. தமிழக அரசிடமோ, இப்போது குழுவில் இருப்போரிடமோ இத்தகைய கட்டமைப்பு வசதி இல்லை. அதனால் நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை சேர்ப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT