சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று கடந்த 2019-ல் மருத்துவர்கள் போராட்டத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், சொன்னதை செய்யவில்லை. இத்தனைக்கும் ஸ்டாலின் முதல்வராகப்பதவியேற்றபோது, கரோனா தொற்றின் உச்சத்தால் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அந்த கடினமான தருணத்தில் உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களை அவரால் நிச்சயம் மறக்க முடியாது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் நடக்கும் ஆட்சி என பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், அவர் கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தவில்லை. அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதி கிடைக்கவில்லை.
எய்ம்ஸுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தர வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியும் செயல்படுத்தவில்லை. மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்கவில்லை.
‘அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். கரோனா காலத்தில் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசுப் பணி வழங்கப்படும்’ என்று சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரிலாவது முதல்வர் அறிவிப்பார் என்று நம்பினோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்க மறுக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. உயிர்காக்கும் துறையின் இதயமாக உள்ள அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆட்சிக் காலம் முழுவதுமே நிறைவேற்றாமல் இருப்பதை மருத்துவ சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது என்பதை வேதனையுடன் கூறுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.