சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலையில் பாரதி பறை பண்பாட்டு மையத்தை திறந்துவைத்து, உற்சாகத்துடன் பறை இசைத்த ஆளுநர் ஆர்.என். ரவி.
விருதுநகர்: பள்ளிகளில் பறை இசை பாடத்தைக் கற்றுத்தர வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்ட மலையில், தமிழக ஆளுநர் ஆளுநரின் விருப்ப நிதி ரூ.50 லட்சம் மதிப்பில், பத்ம விருது பெற்ற பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள ‘பாரதி பறை பண்பாட்டு மையம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.
ரவி பண்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். முன்னதாக, விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா, ஆளுநரை வரவேற்றார். கலை மாமணி விருதுபெற்ற நாகஸ்வர கலைஞர் அய்யாவு பூரண கும்ப மரியாதை அளித்தார்.
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சங்க இலக்கியங்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரம்பரிய இசை போற்றப்பட்டுள்ளது.
பறை இசை அதன் சிறப்புக் குறையாமல் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு பறை இசை கற்றுக் கொடுத்து, மேலும் இதை வளர்க்க வேண்டும். பறை இசையை ஆளுநர் மாளிகையில் அரங்கேற்றம் செய்ய நான் அழைப்பு விடுக்கிறேன்.
முன்பெல்லாம் அதிகாரம் படைத்தவர்களுக்கும், அவர்களுடன் இருந்தவர்களுக்கும் மட்டுமே தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. சமுதாயத்தின் அடித்தட்டில் வாழும் சாதனை மனிதர்களுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதற்கு வேலு ஆசான் ஓர் உதாரணம். பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பறை இசை பற்றிய பாடத்தை கொண்டுவந்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். பறை இசை குறித்து முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டைக் கொண்டாடும்.
அப்போது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும், உலகம் முழுவதும் பறை ஓசை கேட்க வேண்டும். இதை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.