தமிழகம்

ஜோதிடருக்கு அரசுப் பதவி: மாறுபட்ட கருத்துகளுடன் திருமாவளவன், வன்னியரசு சொல்வது என்ன?

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விசிக சட்டப்பேரவைக் குழு தலைவர் வன்னியரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மாறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், “ரிக்கி ராதன் பண்டிட் தவெகவில் செய்தித் தொடர்பாளராக உள்ளார் எனத் தெரிய வருகிறது. ஆகவே, ஒரு செய்தித் தொடர்பாளருக்கு அந்தப் பொறுப்பை வழங்கியுள்ளதாகவே கருதுகிறோம். அவர் கூடுதலாக ஜோதிடமும் பார்க்க கூடியவராக இருக்கலாம். கட்சியில் உள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கலாம்.

ஜோதிடத்தை நம்புவது என்பது வேறு. மதவாத அரசியலில் ஈடுபாடு கொள்வதென்பது வேறு. ஜோதிடத்தை நம்புபவர்கள் எல்லாம் மதவெறி அரசியலை, வெறுப்பு அரசியலை பேசுவதில்லை. அவர் ஜோதிடர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் பதவி வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன்” என்றார்.

அதேவேளையில், விசிக சட்டப்பேரவைக் குழு தலைவர் வன்னியரசு வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வருக்கு ஜோதிடர்: அறிவியலுக்கு புறம்பான நியமனத்தை திரும்பப் பெறுக’ - ஆஸ்தான ஜோதிடர்கள் என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. ஜனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது. அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. ’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?.

மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT