கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 900 பவுன் நகை திருடு போனது தொடர்பான புகாரில், டாக்டர் மருமகன் மற்றும் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
கோவை கணபதி மாநகர் எஸ்.ஆர்.வி. நகரைச் சேர்ந்தவர் எஸ்.சண்முக பாண்டியன். ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் கடந்த 3-ம் தேதி அளித்த புகார் மனு:
எனது இளைய மகள் மருத்துவர் கவுசல்யாவுக்கும், பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் விக்னேஷ்-க்கும் கடந்த 2024-ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன், எனது சம்பந்தி முருகேசன்- வாசுகி, அவர்களது மகள் ஜீவிதா ஆகிய மூவரும் காளப்பட்டியில் உள்ள எனக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான பங்களாவுக்கு குடியேறினர்.
மருமகன் விக்னேஷ் மீது வைத்திருந்த நம்பிக்கையால் லாக்கர் மற்றும் பீரோ சாவியை அவரிடம் ஒப்படைத்தேன். அதில் 1000 பவுன் நகைகள் இருந்தன. பின்னர், காளப்பட்டியில் உள்ள எனது பங்களாவை தனது பெயருக்கு எழுதி வைக்க விக்னேஷ் எனது மகளிடம் வலியுறுத்தினார். இதையறிந்த நான் கடந்தாண்டு அந்த பங்களாவை விற்றுவிட்டேன்.
இதனால் கோபமடைந்த விக்னேஷ் எனது மகளிடம் பிரச்சினை செய்யத் தொடங்கினார். பின்னர், எனது மகளை விட்டு விட்டு, விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சிட்ராவில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினர். ஆனால் எனது பீரோ மற்றும் லாக்கர் சாவியை விக்னேஷ் தர மறுத்துவிட்டார்.
இதனால் சந்தேகமடைந்த நான், லாக்கரை உடைத்து பார்த்தபோது, அதில் 1000 பவுன் நகைகள் இல்லை. இதுபற்றி கேட்டதற்கு 100 பவுன் நகைகளை மட்டும் விக்னேஷ் திரும்பிக் கொடுத்தார். மீதம் உள்ள 900 பவுனை திரும்பிக் கொடுக்கவில்லை. இவற்றின் மதிப்பு ரூ.10 கோடியாகும். நகைகளை கேட்டபோது, விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்னேஷ் மற்றும் அவரது தாயார் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.