சென்னை: “மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதன் மூலம் வலிமையான பாரதத்தில் வளமான தமிழகம் உருவாகும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போகும் தமிழகத்தின் தற்போதைய உண்மை நிலை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி குன்றி, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என்பதுதான். மேலும் தமிழக அரசு, மத்திய அரசோடு ஒத்த கருத்தாக இல்லாமல் காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலே அமைய வேண்டும். அதன் மூலம் வலிமையான பாரதத்தில் வளமான தமிழகம் உருவாகும். வலிமையான பாரதம் பிரதமர் மோடி தலைமையிலே இந்தியா பொருளாதாரத்திலும், பாதுகாப்பிலும் உறுதியாக செயல்படுகிறது.
அதற்கு ஒத்த கருத்துடைய வளமான தமிழகம், வளர்சியான தமிழகம், பாதுகாப்பான தமிழகம் அமைய அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை தமிழக மக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.