ஜி.கே.வாசன் | கோப்புப் படம் 
தமிழகம்

திமுக அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை: ஜி.கே.வாசன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

“திமுக அரசுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை” என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக கோவை காந்தி பார்க் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எஸ்.பி.வேலுமணி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் அமைச்சராக இருந்தபோது மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

கோவை மாநகராட்சியின் வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் அமைத்தவர் அவர். இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். தற்போதைய திமுக அரசை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு. கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தினர்.

சில இடங்களில் குப்பைக்குக் கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் மறக்கக்கூடாது. இந்த திமுக அரசுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணக்கம் தமிழக வளர்ச்சிக்கு உதவும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலுவாக முன்னேறி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் வளர்ச்சி உருவாக வேண்டும்.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியின் வெற்றி, அந்தத் தொகுதியின் வெற்றியைத் தாண்டி தமிழகத்தின் வெற்றியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT