தமிழகம்

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

பி.ஜோசப் ஜெரால்டு

திருச்சி: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதமாக இருப்பதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

ஜென் இசெட்(Gen Z) என்பது பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்களை குறிக்கும் ஒரு தலைமுறை. சிறுவயதில் இருந்தே இணையம், ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்கள். சோஷியல் மீடியாவில் அதிகமாக செயல்படுபவர்கள். 2013 முதல் பிறந்தவர்களை ஜென் ஆல்பா (Gen Alpha) என கூறுகின்றனர்.

          

முந்தைய தலைமுறைகளைபோல ‘பாரம்பரிய அரசியல், விசுவாசம்’ போன்றவை இல்லாமல், ஜென் இசெட் வாக்காளர்கள், ‘வாய்ப்பு, வேலை,கல்வி, நம்பிக்கை’ போன்ற அம்சங்களை கொண்டு முடிவு செய்கின்றனர்.

சமூக ஊடகங்கள் இவர்களின் முக்கிய மூலமாக மாறியுள்ளதால், அரசியல் கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை முன்பைவிட டிஜிட்டல் தளங்களில் அதிகளவில் மையப்படுத்துகின்றன.

திமுக தற்போது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் டிஜிட்டல் பிரச்சாரத்தைமுன்னெடுக்கின்றன. இதனால், தொடர்ச்சியான ஆட்சி, மேம்பாடு என்ற முழக்கத்தால் சில ஜென் இசெட் வாக்காளர்களை ஈர்க்கும் வாய்ப்புள்ளது.

அதேபோல, நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார வாக்குறுதிகள் மூலம் இளைஞர்களை அணுகும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்தால் இந்த ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்து இளைஞர்களை ஈர்க்க கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், கூட்டணியில் உள்ள பாஜகவின் அண்ணாமலைக்கு ஜென் இசெட் அட்டேன்ஷன் கிடைத்திருக்கிறது. நேரடி தாக்கத்துடன் பேசும் பேச்சு, சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருப்பது போன்றவை இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

முன்பு எப்போதும் இல்லாமல் நடிகர் விஜய்யின் வருகையால், இளைஞர்களிடையே புதிய அரசியல் ஆர்வம் உருவாகியுள்ளது. குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தக் கட்சி கவனம் பெற்றுள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தமிழ் அடையாளம், இயற்கை, விவசாயம் போன்ற உணர்வு பூர்வமான கருத்துகளால் இளைஞர்ளை ஈர்க்கின்றனர். சமூக ஊடகங்களில் வலுவான ஆதரவு இருந்தாலும், அவற்றை முழுமையாக வாக்குகளாக மாற்றுவது சவாலாகவே உள்ளது.

இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ஜென் இசெட் வாக்காளர்கள் ஒரே கட்சிக்கு திரள்வது சாத்தியம் குறைவு. ‘Issue-based voting’ எனப்படும் பிரச்சினை அடிப்படையிலான வாக்கு போக்கு அதிகரித்து வருகிறது.

அதனால், வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரியும் வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவிக்கின்றனர். ஜென் இசெட் வாக்காளர்களில் ஒரு பகுதியினர் ஆட்சியின் தொடர்ச்சிக்காகவும், ஒரு பகுதியினர் மாற்றத்துக்காகவும், மற்றொரு பகுதியினர் புதிய அரசியல் முயற்சிகளுக்காகவும் என பல திசைகளில் பிரியும் நிலையில் உள்ளனர்.

2026 தேர்தலில் யார் வெல்வார்கள் என்பதைவிட, யாரை ஜென் இசெட் வாக்காளர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதே தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT