வானதி சீனிவாசன் | கோப்புப்படம் 
தமிழகம்

“சிவகங்கை பெண் காவலருக்கு வன்கொடுமை... இது தோல்வி கழக அரசு!” - வானதி சீனிவாசன்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘சிவகங்கை அருகே ஆயுதப் படை பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்சியிலும் நமக்கு விடிவு இல்லை என்று ஒவ்வொரு பெண்ணும் உணரத் தொடங்கி விட்டனர்’ என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிவகங்கை அருகே ஆயுதப் படை பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை வந்துவிட்டது இனி பெண்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற நினைப்பை தவிடு பொடியாக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தவெக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.

இந்த ஆட்சியிலும் நமக்கு விடிவு இல்லை என்று ஒவ்வொரு பெண்ணும் உணரத் தொடங்கி விட்டனர். முதல்வர் விஜய், நீங்கள் ஆரம்பித்து வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை ஏதோ தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரப்போகிறது என்று நினைத்தால் வழக்கமாக காவல்துறை தன் கடமையை செய்வது போலவே இயங்குவதற்கு ஏன் சிறப்புப்படை என்ற பெயர்?

இப்படி தமிழக பெண்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் தமிழக வெற்றிக் கழக அரசு தோல்வி கழக அரசாக மாறிவிடும் என்பதை நினைவில் கொண்டு பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT