புதுச்சேரி: “கிராமங்களில் இருந்து புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையில் இயக்குவது போல் விரைவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும்” என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
மேலும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் அரசே காலை உணவு தர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது. இதில் கலந்துகொண்டு மாணவிகளுக்கான சேர்க்கையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இரண்டாவது முறையாக கல்வியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்வு இது. கிராமத்திலிருந்து அதிகளவில் மாணவிகள் கல்லூரிக்கு கல்வி கற்க வருகிறார்கள். காலையில் எழுந்து வரவேண்டியுள்ளது. கிராமங்களில் இருந்து புதுச்சேரிக்கு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையில் உள்ளதுபோல் இலவசப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இக்கல்லூரியில் மாணவிகளுக்கு காலை உணவுகளை முன்னாள் மாணவிகள் ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு அரசே காலை உணவு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வெகு விரைவில் அரசே கல்லூரி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க இருக்கிறது. ஷிஃப்ட் முறையில் நடக்கும் பாரதிதாசன் கல்லூரியை ரெகுலராக நடத்தவும் முடிவு செய்துள்ளோம்” என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.